August 24, 2026
தண்டோரா குழு
கோவை சஹோதயா பள்ளிகளின் 10-வது ஆண்டு தடகளப் போட்டிகளில் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டு சாதனை படைத்தனர்.
12-ஆம் வகுப்பு மாணவர் பி. நினாத், 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 1,500 மீட்டர் மற்றும் 800 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் முதலிடம் பெற்று அசத்தினார். அதேபோல், 12-ஆம் வகுப்பு மாணவர் எஸ். ஆஸ்வின் சாமுவேல், 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் சாதனை படைத்தார்.
11-ஆம் வகுப்பு மாணவி ஜோஷிதா பி. ஐயர், வட்டு எறிதலில் முதலிடமும், ஈட்டி எறிதலில் மூன்றாம் இடமும் பெற்றார். 12-ஆம் வகுப்பு மாணவி பி. ஹரிணி, உயரம் தாண்டுதல் மற்றும் 100 மீட்டர் தடை தாண்டுதல் போட்டிகளில் முதலிடம் பிடித்ததுடன், தனிநபர் சாம்பியன்ஷிப் விருதையும் வென்றார். 11-ஆம் வகுப்பு மாணவி கிரேஸ் ஏஞ்சல், நீளம் தாண்டுதலில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்தார்.
மாணவர்களின் சிறப்பான செயல்பாட்டின் மூலம், 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் ஸ்டேன்ஸ் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. மேலும், தொடர் ஓட்டப் போட்டிகளில் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் முதலிடமும், 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் மூன்றாம் இடமும் பெற்றது.
இதனிடையே, எஸ்.எஸ்.வி.எம். வேர்ல்ட் பள்ளி நடத்திய கோவை சஹோதயா பள்ளிகளுக்கிடையேயான கூடைப்பந்து போட்டியில், 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ஸ்டேன்ஸ் பள்ளி அணி இரண்டாம் இடம் பிடித்தது.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி நிர்வாகம் பாராட்டி கௌரவித்தது. நிகழ்ச்சியில் பேசிய ஐலீன் ஜெத்ரோ, மாணவர்கள்,பயிற்சியாளர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
பள்ளியின் “Excelsa Sequar” – “உயர்ந்ததை நோக்கிச் செல்லுதல்” என்ற குறிக்கோள் வெறும் வாசகமாக இல்லாமல், மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கை என அவர் குறிப்பிட்டார். பதக்கங்களும் சாம்பியன் பட்டங்களும் மட்டுமே உண்மையான வெற்றியின் அளவுகோல் அல்ல என்றும், ஒழுக்கம், உறுதிப்பாடு, குழுப்பணி, துணிச்சல் மற்றும் விடாமுயற்சியே வாழ்க்கையில் வெற்றியைத் தீர்மானிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்ச்சியான முயற்சி, ஒழுக்கம் மற்றும் ஒருபோதும் கைவிடாத மனப்பான்மையின் மூலமே சிறப்பு சாதனைகள் உருவாகின்றன என்றும், விளையாட்டு மாணவர்களின் திறமையை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் ஆளுமையையும் வடிவமைக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.