March 21, 2026
தண்டோரா குழு
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 1000 கோடி ரூபாய் கடன்களை கோவை கள பொது மேலாளர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் மண்டலங்கள் மூலம் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக இந்தியன் வங்கியின் செயல் இயக்குனர் கோவையில் தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான (MSME) கடன் வழங்கும் முகாமில் இந்தியன் வங்கியின் செயல் இயக்குனர் அசுடோஷ் சௌத்ரி கலந்து கொண்டார்.
இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இந்தச் சிறப்பு கடன் முகாம் மூலம் சுமார் 1000 கோடி ரூபாய் கடன்களை கோவை கள பொது மேலாளர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் மண்டலங்கள் மூலம் வழங்க இந்தியன் வங்கி திட்டமிட்டுள்ளது.இதில் இன்றைய ஒரு நாள் நிகழ்வில் மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்தியன் வங்கியின் MSME கடன் பிரிவானது தற்போது 16.5% என்ற ஆரோக்கியமான வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது.
பாரம்பரிய கடன் வழங்கும் முறையிலிருந்து மாறி, வங்கி தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் விரைவாகக் கடன் வழங்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
வாடிக்கையாளர்கள் தங்களின் வருமான வரித் தாக்கல் (IT Return), GST விவரங்கள் மற்றும் வங்கிக் கணக்கு அறிக்கைகளை (Bank Statements) சமர்ப்பிக்க ஒப்புதல் அளித்தால், வெறும் 30 நிமிடங்களில் கடனுக்கான ‘கொள்கை அளவிலான அனுமதி’ (In-principle sanction) வழங்கப்படுகிறது.இந்தத் டிஜிட்டல் அனுமதிக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களை வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, விரைவாகக் கடன்களை இறுதி செய்வார்கள் என அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது,இந்தியன் வங்கி அதிகாரிகள்,கள பொது மேலாளர் பி. சுதாராணி,(Field General Manager), மண்டல மேலாளர்கள், வெங்கட் ரமண ராவ் – கோவை, பாலசுப்ரமணியன் – மதுரை, தாமோதரன் – திருப்பூர்,அருண் பாண்டியன் – காரைக்குடி,மற்றும் சேலம் துணை மண்டல மேலாளர் ரூபக் கேஷ்ரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.