December 8, 2025
தண்டோரா குழு
கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ். ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, இந்திய அரசின் சமூக நலத்துறை சார்பில் இயங்கும் தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து “தலைமுறையினரை இணைத்தல், முதுமை, உள்ளாக்கம் மற்றும் அதிகாரமளித்தல்’ என்ற தலைப்பில் 2 நாள் தேசிய மாநாடு மற்றும் பயிலரங்கு டிச. 8, 9 ம் தேதிகளில் சந்திரா கருத்தரங்கு
அரங்கில் துவங்கியது.
இந்த நிகழ்ச்சி முதியோர் அனைவர்க்கும் தனித்துவமான கற்றல் மற்றும் கலந்துகொள்ளும் வாய்ப்புகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக மாறும் மக்கள் தொகை பரிணாமத்தை கருத்தில் கொண்டு நிகழும் இந்த நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. 2050 ம் ஆண்டிற்கு பின்னர், முதியோர் மக்கள் தொகை இரட்டிப்பாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சி மூலம் முதியோரின் உரிமைகள், சுகாதார விழிப்புணர்வு, டிஜிட்டல் பயிற்சி, மனநலம், நிதி பாதுகாப்பு மற்றும் மரியாதையுடன் கூடிய அனுபவ மேம்பாட்டை ஊக்குவிக்கும். கருத்தரங்கிற்கு வந்திருந்த அனைவரையும் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி செயலாளர் யசோதா தேவி வரவேற்றார். கோவை கேர் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் கர்னல் அச்சல் ஸ்ரீதரன் சிறப்புரையாற்றினார்.
இரு நாட்களாக நடைபெறும் நிகழ்ச்சியில் முதுமையைப் பற்றிய தவறான நம்பிக்கைகள்,முழுமையான உடல் மற்றும் மனநலம்,ஊட்டச்சத்து மற்றும் இயக்கத்திறன்,டிஜிட்டல் பயன்பாடு, நிதிப்பதுகாப்பு போன்ற தலைப்புகளில் முன்னணி நிபுணர்கள் சிறப்புரை ஆற்றினர்.
முதியோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள்,பயிற்றுனர் மற்றும் சமூக பணியாளர்கள் ஒன்றுகூடி நடக்கும் இந்த நிகழ்ச்சி தலைமுறைக்கு இடையிலான உரையாடலை ஊக்குவித்து, பரஸ்பர மரியாதை மற்றும் குடும்ப சமூக உறவுகளை வலுப்படுத்தும்.
முதியோர் உதவி, தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் தேசிய முயற்சிகள் மற்றும் அரசாங்க ஆதரவுத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வும் வழங்கப்படும்.இந்நிகழ்ச்சி முதியோரின் கற்றல், அதிகாரம், நலம் மற்றும் சமூக இணைப்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.