July 26, 2025
தண்டோரா குழு
சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் எழுதிய வெற்றி உங்கள் பக்கம் (வாழ்வியல் மேம்பாட்டு நூல்) மற்றும் இதயத்தின் ஓசை (கவிதை தொகுப்பு) நூல்கள் வெளியீட்டு விழா இன்று (26.07.2025) கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா இணைந்து கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2025 என்ற புத்தக கண்காட்சியை கோவை, பீளமேடு, கொடிசியா வளாகத்தில் நடத்தி வருகின்றது.
விழாவிற்கு வந்திருந்தவர்களை ரூட்ஸ் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு துறை, தலைவர், டாக்டர் சுதாகர் வரவேற்றார்.
இக்கண்காட்சியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் புத்தகத்தின் முதல் பிரதியை கோவை, பாராளுமன்ற உறுப்பினர் கணபதி பி. ராஜ்குமார் வெளியிட்டு பேசியதாவது :- வாசிப்பு என்றாலே நமக்குள் மிகுந்த உற்சாகம் பிறந்துவிடும். மதிய உணவு அருந்திவிட்டு உறங்கும் நேரம், மாலை தொலைக்காட்சிளில் நாடகம் பார்க்கும் நேரம் ஆகியவற்றை இடையூறு செய்தால் நாம் பொருத்துக் கொள்ள மாட்டோம். அதையும் மீறி இங்கு இவ்வளவு பேர் இங்கு வந்தது மகிழ்ச்சியளிக்கின்றது.
கவிதாசனும்,நானும் கல்லூரியில் சம காலத்தில் படித்தோம்.அவர் அப்போதிருந்தே நிறைய கவிதைகள் எழுதுவார்.அப்போதே படைப்பாற்றல் மிக்க நல்ல நண்பராக அவர் இருந்தார்.இன்று இவ்வளவு பெரிய பேச்சாளராக, கவிஞராக, எழுத்தாளராக கோவையில் அவர் பரிணாமித்துக் கொண்டிருப்பது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
வாசிப்பு, புத்தகங்கள் எல்லாம் போய் விடும் என்ன செய்வது என அனைவரும் சிந்தித்துக் கொண்டிருந்த போது, தமிழும் சாகாது, வாசிப்பும் சாகாது, புத்தகங்கள் என்றைக்கும் இருக்கும் என்பதற்கு இந்த விழா தான் சாட்சி.மாவட்ட நிர்வாகமும், கொடிசியாவும் புத்தகக் கண்காட்சியை நடத்தி சிறப்பாக பணி செய்து கொண்டு இருக்கிறார்கள்.நான் வளர்ந்த போது, வாசித்த புத்தகங்கள் தான் இன்றைக்கும் என்னை காப்பாற்றிக் கொண்டு இருக்கிறது. இதை நாம் பெருமையாக அனைத்து இடங்களிலும் கூற வேண்டும். ஒருநாளைக்கு 100 பக்கம் படிக்க வேண்டும் என்பது எனக்கு தெரிந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியின் பழக்கம்.
தினமும் டைரி எழுதும் பழக்கம் உடையவர். படிப்பு, எழுத்து என்று இருப்பர். அவருக்கு உறுதுணையாக இருந்தது வாசிப்பு. 28 தலைப்புகளும் கட்டுரையாக மட்டுமல்ல, புத்தகமாக வரக்கூடிய அளவுக்கு கருத்துகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
கட்டுரை தொகுப்பின் முதல் பிரதியை கோவை, பூ.சா.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேனாள் செயலர், முனைவர் பா. சம்பத்குமார் பெற்றுக் கொண்டார்.
கவிதை தொகுப்பின் முதல் பிரதியை கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தின் மகாகவி பாரதியார் உயராய்வு மையத்தின், இயக்குனர், முனைவர் சி. சித்ரா அவர்கள் பெற்றுக் கொண்டார்.
திருப்பூர் முத்தமிழ் சங்கம், தலைவர்,கே. பி.கே.செல்வராஜ் மற்றும் கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி 2025-ன் துணைத் தலைவர், கே.முத்துக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் ஏற்புரையாற்றி பேசும் போது :-
இதுவரை 80-க்கும் மேற்பட்ட நூல்களை நான் எழுதியுள்ளேன்.இன்று இருநூல்கள் வெளியிடப்பட்டன.சக்தியை பலப்படுத்தி அவர்களை சாதனையாளர்களாக மாற்றும் முயற்சியில் இந்த புத்தகம் எழுதப்பட்டு உள்ளது.தொட்டு தொட்டு பார்த்தால் அது காகிதம், தொடர்ந்து படித்தால் அது ஆயுதம் என்ற வெற்றியை உள்ளடக்கி, தனிமனித முன்னேற்றத்துக்கான லட்சியம், தொடர் முயற்சி, தன்னம்பிக்கை, விடா முயற்சி, தோல்விகளில் இருந்து கற்றுக் கொண்டு முன்னேறுவது, சூழ்நிலைகளில் சாதகமாக மாற்றி எழுவது உள்ளிட்ட கருத்துகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
எழுத்தாளர் வெற்றியடைய வேண்டும் என்றால் வாசகர்களை வெற்றியடையச் செய்ய வேண்டும். இதை வாசித்து உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்று பேசினார்.