July 12, 2025
தண்டோரா குழு
குமரகுரு கல்வி நிறுவனங்களில் ஒன்றான குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரி இன்று 2025-26 கல்வி ஆண்டில் புதிதாக இணைந்துள்ள மாணவ மாணவிகளை வரவேற்கும் விதமாக ‘ஸ்வாகதம்’ எனும் நிகழ்ச்சியை நடத்தியது.
2025 முதல் 2028 வரை இக்கல்லூரியில் தங்கள் கல்வியை கற்கும் மாணவர்கள் தங்களின் பெற்றோருடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரையும், கல்லூரியின் முதல்வர் தீபேஷ் சந்திரசேகரன் வரவேற்றார். குமரகுரு கல்விநிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.
முதல்வர் தீபேஷ் மாணவர்களை வரவேற்று, இன்று இக்கல்லூரியில் அவர்கள் துவங்கும் பயணமானது, சிறந்து எதிர்காலத்துக்கு அவர்களை தயார் செய்யும் விதமாக அமையும் என்று பேசினார்.
குமரகுரு கல்வி நிறுவனங்களின் குளோபல் எங்கேஜ்மெண்ட் துறை இயக்குனர் விஜிலா எட்வின் கென்னடி, கல்வி கற்க இந்த உலகமே ஒரு வகுப்பறை என மாணவர்கள் கருத வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சங்கர் வானவராயர் பேசுகையில்,
இந்த கல்லூரியின் 42 ஆண்டு வரலாற்றையும், இதன் நிறுவனர் அருட்ச்செல்வர் மகாலிங்கம் ஐயா அவர்களின் தொலைநோக்கு பார்வை பற்றியும் பேசினார்.அதை தொடர்ந்து, புதிதாக சேர்ந்துள்ள மாணவ, மாணவிகள் இந்த கல்லூரி வழங்கும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்தி தங்களை முன்னேற்றிக்கொள்ளவேண்டும் என பேசினார்.
சிறந்த கல்வியை வழங்க ஆசிரியர்கள் உள்ளனர் ஆனால் அவற்றை பொறுப்புடன் வாங்கிக்கொள்வதும், தங்களை முன்னேற்றிக்கொள்வதும் மாணவர்கள் கையில் தான் உள்ளது என்றார்.
அடுத்த 3 ஆண்டில் என்ன ஆகவேண்டும், எதை சாதிக்கவேண்டும் என்பதை இந்த புது துவக்கத்தில் முடிவு செய்து, அதை முடித்தகாட்டவேண்டும் என்றார்.
குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரி என்பது வெறும் புத்தக கல்விக்கான இடம் அல்ல. இங்கு மாணவர்கள் கலை, விளையாட்டு என அனைத்திலும் தங்களுக்கு உள்ள திறமைகளை தெரிந்து, வளர்த்து கொள்ளவும் சாதிக்கவும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்றார். அனைவரும் தங்களின் மனதை உடல் நலத்தையும் பேணிக்காக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். மாணவர்கள் தங்களின் கனவுகளை நிஜமாக்கவும், பெற்றோரை பெருமைப்படுத்தும் செயல்களில் ஈடுபடவேண்டுமே தவிர வேறு எதிலும் தங்கள் நேரத்தை வீணடிக்கவேண்டும் என அவர் அறிவுரை வழங்கினார்.
நல்ல குணங்கள் உள்ளவர்களாக தங்களை உருவாக்கிக்கொள்ளவும் முயலுங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார். நல்ல குணமே வாழ் நாள் முழுவதும் ஒரு அரணாக இருக்கும் என்றார்.