• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கோவில்

November 22, 2017 findmytemple.com

சுவாமி : பிரம்மசிரகண்டீஸ்வரர், வீரட்டானேஸ்வரர்.

அம்பாள் : மங்கள நாயகி.

மூர்த்தி : மகாலட்சுமி, சுப்பிரமணியர், மூர்த்தங்களாக பிரமன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர்.

தீர்த்தம் : நந்தி தீர்த்தம், குட முருட்டி, தட்ச தீர்த்தம், பிரம தீர்த்தம்.

தலவிருட்சம் : வில்வம் மரம்.

தலச்சிறப்பு :

தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இத்தலம் 12வது தலம் ஆகும். இத்தலத்தின் இராஜகோபுரம் ஐந்து நிலைகளை கொண்டு மேற்கு நோக்கி காட்சியளிக்கிறது. கோபுர வாயில் வழியே உள்ளே செல்லும் போது நேரே கவசமிட்ட கொடிமரம், கொடிமர விநாயகர், நந்தி மற்றும், பலிபீடம் உள்ளது. வெளிப் பிரகாரத்தில் இடதுபுறம் தண்டபாணி சந்நிதி தனிக் கோவிலாக வெளவால் நெத்தி அமைப்புடைய மண்டபத்துடன் உள்ளது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். வலதுபுறம் விநாயகர் உள்ளார். உள் வாயில் கடந்ததும் இடதுபுறம் வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் காட்சித்தருகிறார். அடுத்து மகாலட்சுமி சந்நிதியும் எதிரில் நடராஜ சபையும் உள்ளது. வலமாக வரும்போது விஷ்ணுதுர்க்கை சந்நிதி உள்ளது. பைரவரும், பலவகை விநாயகர்களும், (வெவ்வேறு வகை மூர்த்தங்கள்) சூரியனும், அமர்ந்த கோலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரரும் அடுத்தடுத்துக் காட்சி தருகின்றனர். சண்டேஸ்வரர் தனி சந்நிதி உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக பிரமன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர் மூர்த்தங்கள் உள்ளன.

உள்வலம் முடித்து, உட்சென்றால் இடதுபுறம் நவக்கிரகங்கள் உள்ளது. துவாரபாலகர்களுக்குப் பக்கத்தில் சாதாதாப முனிவர் உருவம் உள்ளது. அர்த்த மண்டபத்தில் வாயிலுக்கு வடபுறத்தில் சப்தஸ்தான தலங்களைக் குறிக்கும் 7 லிங்கங்கள், பஞ்சபூத தலங்களைக் குறிக்கும் 5 லிங்கங்கள், சாதாதாபருக்குக் காட்சி தந்த காளத்திநாதர் சந்நிதி முதலியவைகள் உள்ளன. நவக்கிரகங்களில் சூரியன் இரு மனைவியருடன் அருள்பாலிக்கிறார். மூலவர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் சுயம்பு லிங்கத் திருமேனியுடன் மேற்குப் பார்த்த நிலையில் அருள்பாலிக்கிறார். மூலவர் பாணம் சற்று உயரமாகவுள்ளது. கருவறை நுழைவாயிலின் இருபுறமும் முருகப் பெருமான் உள்ளார். இத்தலத்தில் பிரம்மதேவருக்கும் சரஸ்வதிதேவிக்கும் தனி சந்நிதி உள்ளது. இங்குள்ள பிரம்மா, சரஸ்வதி மிகவும் விசேஷமான திருமேனியுடன் காட்சி அளிக்கின்றனர்.

மூலவர் பிரம்மசிரகண்டீசுவரர் சந்நிதிக்கு அருகில் கிழக்கு நோக்கியபடி இந்த பிரம்மாவின் சந்நிதி அமைந்திருக்கிறது. பிரம்மதேவன் தாமரை மலருடனும், ஜபமாலையுடனும் கம்பீரமாக காட்சிதருகிறார். அவரது வலதுபுறம் சரஸ்வதி அழகிய திருமேனியுடன் காட்சியளிக்கிறாள். பிரமன் சிரம்கொய்த பின், அவன் வேண்டிட ஐம்முகங்களின் அழகினை சதுர்முகங்களில் (நான்கு முகங்களில்) இறைவன் அருளிச் செய்ய, பிரமன் பெற்றுப் பயனடைந்ததாக வரலாறு. பிரமன் சிரம் கொய்வதற்காக இறைவன் மேற்கொண்ட வடுகக் கோலம் சுவாமி சந்நிதிக்கு எதிரில் இடதுபுறமாக அமைந்துள்ளது.

இத்தலத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் 13, 14, 15 தேதிகளில் மாலையில் 5-45 முதல் 6-15 வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் பிரம்மசிரகண்டீசுவரர் திருமேனியின் மீது படுகின்றன. திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் ஐந்தாவது தலமாகும். இத்தலத்தில் முருகப் பெருமான் வலது கையில் ஜபமாலையும், இடது கையில் வஜ்ர சக்தியும் கொண்டு “ஞான சக்தீதராகக்” காட்சித்தருகின்றார். இவர் ஞானஸ்கந்தர் என்றும் அழைக்கப்படுகிறார்.

தல வரலாறு :

பிரம்மா ஒருசமயம் தான் படைத்த ஒரு பெண்ணின் மீதே மையல் கொண்டார். அந்தபெண், தன்னை பிரம்மாவிடம் இருந்து காக்கும்படி அம்பிகையிடம் முறையிட்டாள். அம்பாள், சிவனை வேண்ட, கோபம் கொண்டவர் உக்கிரமாக பைரவர் வடிவம் எடுத்துச் சென்றார். பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் வெட்டி விட்டார். தவறுணர்ந்த பிரம்மா, மன்னிப்பு கிடைக்க சிவனை வேண்டி தவமிருந்தார். சிவன், அவரை மன்னித்தருளினார். பின், அவரது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். பிரம்மாவின் சிரம் (தலை) கொய்தவர் என்பதால் இவர், “பிரம்மசிரகண்டீஸ்வரர்’ என்று பெயர் பெற்றார். அட்டவீரட்டானத் தலங்களில் முதலாவது தலம் ஆகும்.

இங்கு தங்கியிருந்த சதாசபர் என்ற மகரிஷி, ஒவ்வொரு பிரதோஷ தினமும், காளஹஸ்தி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஏதேனும் ஒரு பிரேதாஷ நாளில், காளஹஸ்தி செல்ல முடியாவிட்டால், தன் உயிரை விட்டுவிடுவதாகவும் சபதம் செய்திருந்தார். ஒரு பிரதோஷத்தன்று இடியுடன் கூடிய மழையின் காரணமாக, சதாசபர் மகரிஷி காளஹஸ்தி செல்ல முடியாமல் போகவே அக்னி வளர்த்து, அதனுள் குதித்து தன் உயிரை மாய்க்க முற்ப்பட்டார். அப்பொழுது சிவபெருமான், சதாசபர் மகரிஷிக்கு காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார் என்பது வரலாறு. சாதாதாப முனிவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது.

வழிபட்டோர் : சதாசபர், பிரம்மா.

பாடியோர் : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்.

நடைதிறப்பு : காலை 6.00 முதல் பகல் 1.00 மணி வரை, மாலை 4.00 முதல் இரவு 8.00 மணி வரை.

பூஜை விவரம் :

காலை சந்தி: 9.00 – 9.30,

உச்சிகாலம்: 11.30 – 12.00,

சாயரட்சை: 6.00 – 6.30,

அர்த்தஜாமம்: 8.00 – 8.30.

அருகிலுள்ள நகரம் : தஞ்சாவூர்.

கோவில் முகவரி : அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கோவில்,திருக்கண்டியூர் அஞ்சல், (வழி) திருவையாறு, தஞ்சை மாவட்டம் – 613 202.

மேலும் படிக்க