November 12, 2018 தண்டோரா குழு
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தோ்வில் பெரியார் பெயரில் சாதி குறிப்பிட்டு கேள்வி இடம் பெற்றிருந்ததற்காக தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் வருத்தம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நவம்பா் 11ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் (TNPSC) குரூப் 2 தோ்வு நடைபெற்றது.தமிழகத்தில் சார் பதிவாளர் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 199 பணிடங்களுக்காக இந்த தேர்வு நடைப்பெற்றது.இந்த தேர்விற்கு தமிழகத்தில் 2 ஆயிரத்து 268 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.தமிழகம் முழுவதும் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தோ்வை எழுதினா்.
இந்நிலையில்,தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளில் பொது அறிவு பிரிவில் திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்வி இடம் பெற்றிருந்தது.இந்த கேள்விக்கு தரப்பட்ட 4 விடைகளில் பெரியாரின் பெயரும் இடம் பெற்றிருந்தது.அதில் தந்தை பெரியாரின் பெயர் தவறாக இ.வெ.ராமசாமி என்றும் பெரியாரின் பெயருக்கு அருகே நாயக்கர் என சாதி பெயரையும் சேர்த்து இடம் பெற்றிருந்தது.காந்திஜி ராஜாஜி அண்ணா ஆகிய தலைவர்களின் பெயர் சரியான முறையில் அச்சிடப்பட்ட நிலையில் பெரியரின் பெயர் மட்டும் தவறாக அச்சிடப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு தமிழக அரசியல் தலைவா்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து இதற்கு தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் வருத்தம் தெரிவித்துள்ளது.மேலும் குரூப் 2 வினாத்தாள்களை நாங்கள் தயாரிப்பது கிடையாது, நிபுணா் குழு வினாத்தாளை தயார் செய்து எங்களிடம் சீலிட்ட கவரில் வழங்கும்.அதே முறையில் தான் இந்த வினாக்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.இருப்பினும் இது தொடா்பாக முறையான விசாரணை நடத்தப்படும்.வரும் காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாது என்று தோ்வாணையம் விளக்கமளித்துள்ளது.