October 17, 2018 தண்டோரா குழு
ஜீன்ஸ் அணிந்து சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்ணை பக்தர்கள் முற்றுகையிட்டதால் பத்தனம்திட்டாவில் பதற்றம் நிலவி வருகிறது.
கேரள மாநிலம் சபரிமலையில் உலகப் புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து கடந்த மாதம் 28–ந் தேதி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.குறிப்பாக கேரளாவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி கேரள அரசு மனுதாக்கல் செய்யவேண்டும் என்று கோரியும் போராட்டங்கள் வலுத்துள்ளன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில்,ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று(புதன்கிழமை) மாலை திறக்கப்பட்டு,22–ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடை திறந்து இருக்கும்.இதனால் பெண்களின் வருகை அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து,இன்று மாலை 5:00 மணிக்கு நடை திறக்க இருப்பதால் இதில் கலந்துகொள்ள வரும் பெண் பக்தர்களுக்கு எந்த தீங்கும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக கேரள காவல்துறை 1500 போலீஸார்களை பாதுகாப்பிற்காக சபரிமலையில் குவித்துள்ளது..
இதனிடையில்,சபரிமலைக்கு செல்வதற்காக பம்பை செல்லும் பேருந்தில் ஜீன்ஸ் அணிந்து லிபி என்ற பெண் ஏற முயன்றார்.அப்போது அவரை பத்தனம்திட்டாவில் பஸ்ஸிலிருந்து பக்தர்கள் இறக்கி விட்டனர்.இதனால் பக்தர்களுடன் லிபி கடும் வாக்குவாதம் செய்து வருகிறார்.மேலும் பாதுகாப்பு பணிக்காக சென்ற பெண் போலீஸாரும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.