August 21, 2018 தண்டோரா குழு
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 361 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.மழை வெள்ளத்தால் கேரளாவில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாகின.இதனால் வீடுகளை இழந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்னர்.
இந்நிலையில்,கேரளத்தில் வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில்,கேரளத்தில் வெள்ளப்பேரழிவால் எண்ணற்ற மனித உயிர்கள் பலியானதற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,தோழமையுள்ள இந்திய மக்களுடன் துக்கத்தை ரஷ்யா பகிர்ந்து கொள்வதாகவும்,இயற்கைப் பேரிடரில் காயமடைந்தோர் விரைவில் குணமடைவார்கள் என நம்புவதாகவும் விளாடிமிர் புடின் குறிப்பிட்டுள்ளார்.