August 21, 2018 தண்டோரா குழு
கோவையில் உரிமம் புதுப்பிக்கப்படாமல் செயல்பட்டு வந்த 76 டாஸ்மாக் மதுபானக் கூடங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை மாநகரில் சுமார் 154 டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் இயங்கி வரும் நிலையில் மாதந்தோறும் தங்களுக்கான உரிமங்களை நிதி செலுத்தி புதுப்பிக்க வேண்டும்.ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக உரிமத்தை புதுப்பிக்காமல் 76 டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது
இதனையடுத்து சுமார் மூன்று கோடி ரூபாய் வரை நிலுவைத் தொகை மாவட்ட நிர்வாகத்திற்கு செலுத்தாததையடுத்து மாவட்ட வருவாய்த் துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
மேலும்,காந்திபுரம்,ரத்தினபுரி,ஆர்.எஸ்.புரம்,உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கூடங்களுக்கு சீல் வைக்கும் பணியை வருவாய் துறையினர் 6 குழுவாக சென்று மேற்கொண்டனர்.சீல் வைத்தும் நிலுவைத் தொகையை செலுத்தாமல் மீண்டும் விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.