October 17, 2018 தண்டோரா குழு
தமிழகத்தின் முதல் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட,கோவை சிங்காநல்லூர் குளத்தில், மாநகராட்சி மற்றும் தனியார் அமைப்பு சார்பில் குளத்தின் பல்வேறு பகுதிகளில் சிற்பங்கள் மற்றும் கல் ஓவியங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
பல்லுயிர் பெருக்கத்தின் முன்மாதிரியாக திகழும் கோவை சிங்காநல்லூர் குளம் தமிழகத்தின் முதல் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக கரை ஓரத்தில் மியாவாக்கி மரப் பண்ணை அமைப்பது,பனை விதைகள் நடுவது,பல்லுயிர் சூழலைக் கணக்கிடுவது,குளக்கரையை பலப்படுத்த வெட்டிவேர் நடுவது என ஒவ்வொரு வார ஞாயிற்றுக்கிழமைகளிலும் இங்குள்ள சூழலை பாதுகாக்க பெரும் முயற்சி எடுக்கபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாநகராட்சியும்,தனியார் அமைப்பும் சேர்ந்து குளத்தில் பல்வேறு பகுதிகளில் கல் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.பல்வேறு தன்னார்வலர்கள் இணைந்து இந்த பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில்,சிங்காநல்லூர் குளத்தில் கல்,சிற்பங்கள் மற்றும் நகர்ப்புற பல்லுயிர்களின் ஓவியங்களை கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதன்மூலம் சிங்காநல்லூர் குளம் மேலும் புத்துயிர் பெற்றுள்ளது.குளத்தில் வாழும் உயிரினங்களை பாதுகாக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
.