October 10, 2018 தண்டோரா குழு
கோவையில் 2015ம் ஆண்டு 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கூலிப்படைத் தலைவனுக்கு அக்.17 வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் திருவிடைமருதூரில் வழக்கறிஞர் ராஜா என்பவர் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெட்டி கொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக கைது செய்யப்பட்ட மணிகண்டன்,மாதவன்,தியாகு,அருண் ஆகியோர் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி கோவை சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தனர்.
கோவையில் இருந்து காரில் தஞ்சாவூர் கிளம்பிய போது சூலூர் அருகே சிந்தாமணிபுதூர் என்ற இடத்தில் வழிமறித்த மோகன்ராம் தலைமையிலான கும்பல் தியாகு,அருண்,மாதவன் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டும்,அருவாளால் வெட்டியும் கொலை செய்தனர்.இதில் மணிகண்டன் என்பவர் தப்பினார்.இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக 19 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.மோகன்ராம் மற்றும் சந்தோஷ் காந்தி என்ற இருவர் தலைமறைவாக இருந்தனர்.
இந்நிலையில் மோகன்ராம் மும்பையில் தலைமறைவாக இருப்பதாக தஞ்சை ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து கோவை போலீசார் உதவியுடன் மோகன்ராமை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மும்பையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.இதனையடுத்து கைது செய்யப்பட்ட மோகன்ராம் இன்று கோவை இரண்டாவது விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.அவரை வரும் 17ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரபு சங்கர் உத்திரவிட்டார்.இதனையடுத்து மோகன்ராம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.கைது செய்யப்பட்டுள்ள மோகன்ராம் மீது சென்னை,திண்டுக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் கொலை,கொள்ளை வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.