August 21, 2018
கோவை பீளமேடு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்து நடு சாலையில் தவறி விழுந்த பெண் மீது அரசுப் பேருந்து ஏறி இறங்கியதில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த புஷ்பநாதன் மற்றும் சகாயமேரி தம்பதியர் இன்று காலை கோவை பீளமேடு பகுதியில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் கண் பரிசோதனைக்காக சென்றுள்ளனர்.அங்கு புஷ்பநாதனுக்கு கண் பரிசோதனை முடித்து விட்டு இருவரும் இருசக்கர வாகனம் மூலம் வீட்டிற்கு திரும்பிய நிலையில் புஷ்பநாதன் வாகனத்தை ஓட்டி வந்தார்.
பீளமேடு ஹோப் காலேஜ் சந்திப்பைக் கடந்து சென்ற போது திடீரென சாலையின் நடுவே புஷ்பநாதன் நிலை தடுமாறவே சகாயமேரி நடு சாலையில் கீழே விழுந்தார்.இதனால் கட்டுப்பாட்டை இழந்து இருவரும் சாலையில் விழுந்ததையடுத்து பின்னால் வந்த அரசு பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சகாயமேரியின் தலையில் ஏறி இறங்கியது.
இதில் பலத்த காயமடைந்த சகாயமேரி உயிருக்கு போராடிய நிலையில் போலிஸாரால் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதேபோல் கை கால்களில் காயங்களுடன் உயிர் தப்பிய புஷ்பராஜ் மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கண் பரிசோதனை செய்துவிட்டு வாகனங்கள் ஓட்ட கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரை. இந்நிலையில் மருத்துவர்களின் அறிவுறுத்தலையும் மீறி புஷ்பராஜ் வாகனம் ஓட்டியதால் பார்வை தெளிவில்லாமல் இருந்ததன் காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.