October 17, 2018 நேயப்பிரியன்
சில நாட்களுக்கு முன் வால்பாறை-காடாம்பாறை மலைப்பாதை சாலையில் கொண்டை ஊசி வலைவில் டெம்போ ஒன்று விபத்திற்குள்ளாகி சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியானார்கள் 12 பேர் படுகாயமடைந்தனர்.இதற்கு காரணம் ஓட்டுநர் உரிமம் பெறாமல் முறையான பயிற்சியின்றி டெம்போ ஓட்டுநர் வாகனத்தை இயக்கியதே.
ஆனைமலைப் புலிகள் காப்பகத்தில் கேரள-தமிழக எல்லையையொட்டி அடர்த்தியான வனத்திற்குள் காட்டுப்பட்டி, குழிப்பட்டி,குறுமலை,மாவடப்பு,மேல்குறுமலை போன்ற பல்வேறு மலைக்கிராமங்கள் உள்ளன.இங்கு நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்கள் வசித்துவருகின்றனர்.இவர்களில் பலர் பள்ளி கல்வியை பாதிவியில் விட்டவர்கள்.இவர்களில் பலருக்கு நான்குச் சக்கரவாகனம் ஓட்டத்தெரிந்த போதிலும் இவர்கள் முறையான பயிற்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் இன்றி மலைப்பாதையில் கனரக வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
இப்படியாக ஓட்டுநர் உரிமம் இல்லாமல் சில நாட்களுக்கு முன்பு குறுமலையைச் சேர்ந்த ராஜன்(40) என்பவர் இயக்கிய டெம்போ விபத்துக்குள்ளாகியதில் 5 அப்பாவி மக்கள் சம்பவஇடத்திலேயே பலியாகினர் 12 பேர் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.இந்த விபத்தில் தன் பெற்றோரை இழந்து ஆதரவின்றி நிற்கிறான் விபத்தில் உயிர்தப்பிய ராக்குமார் என்று சிறுவன்.
காட்டுப்பட்டி,குழிப்பட்டி,குறுமலை,மாவடப்பு,மேல்குறுமலை போன்ற மலைகிராமங்களில் தாங்கள் விளைவித்த காய்கறிகளை பொள்ளாச்சியில் உள்ள சூளேஸ்வரன்பட்டியில் விற்றபின் கோட்டூர் சந்தையில் வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருள்களை வாங்கியப் பின் தாங்கள் வந்த டெம்போவில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அந்த 18 பேரும்,டெம்போ ஆழியாறு அட்டகட்டி வனத்துறை சோதனைச் சாவடியைக் கடந்து கடாம்பாறை செல்லும் ஆர்சில் நுழைந்து சில கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்த போது மணி இரவு 9.30 ஓட்டுநர் ராஜனின் கட்டுப்பாட்டை மீறி 20 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிந்தது ஒரு குட்டிகரணம் போட்டது அந்த டெம்போ.
ஆள்நடமாட்டம் இல்லாத இருள்சூழ்ந்த அடர்ந்த வனப்பகுதி என்பதால் 18 பேரில் அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை.இரவு 10.30 மணி வரை சுமார் 1 மணி நேரம் உதவிகிடைக்காமல் 5 பேர் அங்கேயே இறந்துவிட்டனர் மற்றவர்கள் ரத்தப்போக்கு மற்றும் வலியுடன் ஒரு மணிநேரம் துடித்துள்ளனர்.பெற்றோர் இறந்தது தெரியாமல் சடலங்களுடன் இருட்டில் அமர்ந்து 1 மணி நேரம் அழுதுகொண்டே இருந்திருக்கிறான் விபத்தில் சிறு காயமின்றி உயிர் தப்பிய குறுமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற 10 வயது சிறுவன்.
சுமார் 1 மணி நேரம் கழித்து சுயநினைவு திரும்பிய ஓட்டுநர் விபத்து குறித்து அருகில் உள்ளசோதனைச் சாவடிக்கு தகவல் கொடுத்த பின்னர் தான் மீட்புப்பணிகள் துவங்கின.ஓட்டுநர் ராஜன் மீது 304A பிரிவின் கீழ் காடாம்பாறை போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது தான் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது தெரியவந்தது.
இதுகுறித்து காடாம்பாறை காவல் உதவி ஆய்வாளர் உதய சூரியன் கூறியதாவது:
“போக்குவரத்து வாகனங்களை இயக்க ஓட்டுநர் உரிமம் பெற குறைந்த பட்ச கல்வித் தகுதியாக 8-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியம்.ஆனைமலையில் உள்ள பல மலைகிராமங்களில் இருக்கும் மலைவாழ் ஓட்டுநர்கள் 8-ம் வகுப்பி தேர்ச்சி பெறாமல் இப்படித்தான் வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். ஓட்டுநர் உரிமம் இல்லாததால் காப்பீடு மூலமாக விபத்து இழப்பீட்டுத் தொகையை கூட பெற முடியாத லைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரசு மலைவாழ் மக்களின் கல்வித் தகுதியில் ஏதேனும் சலுகை வழங்கினால் முறையாக ஓட்டுநர் பயிற்சி பெற வாய்ப்பு உள்ளது. இது போன்ற வி்பத்துக்களையும் குறைக்கலாம்.
இது குறித்து ஓய்வுபெற்ற போக்குவரத்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
“ஒருவர் போக்குவரத்து வாகனங்களை இயக்க பொதுப்பணி வில்லை (Badge) பெறுவதற்கு 1989-ம் வருட மத்திய மோட்டார் வாகன விதி 8-ன் படியும்,1989-ம் வருட தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 7 மற்றும் 10 –ன் படி போக்குவரத்து விதிகளைப் படித்துதெரிந்துகொள்ள குறைந்துறை பட்சம் 8-ஆம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியமாக இருந்தது.ஆனால் ஓய்வு பெற்ற ஆர்.டி.ஓ அலுவலக அதிகாரி வேதாபுரி என்பவர் சிலருடன் இணைந்து உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு ஒன்றை தொடர்ந்து விதிகளைத் தளர்த்தி சாதகமாக தீர்ப்பை பெற்றார்.அதன்படி 2016ம் ஆண்டு முதல் 7300 கிலோ எடைக்குறைவான வாகனங்களான டெம்போ, வேன், கால்டாக்சி மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை இயக்க 8-ஆம் வகுப்புத்தேர்ச்சி என்பது இனி தேவையில்லை.இதை தமிழக அரசு இன்னும் முறையாக நடைமுறைபடுத்தவில்லை.இது தொடர்பான சுற்றறிக்கையை போக்குவரத்து,காவல்துறை உள்ளிட்ட அரசு துறைகளுக்கு முறையாக தெரியப்படுத்தாதே இது குறித்த குழப்பங்களுக்கும் காரணம்” என்றார்.