April 20, 2018 தண்டோரா குழு
அமெரிக்காவில் உள்ள பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை எப்படி நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவை காளப்பட்டியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இந்த விழாவில் பள்ளி கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன்,ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.முன்னதாக பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த மாணவர்களின் ஓவியங்களை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,
தமிழகத்தில் பல போராட்டங்கள் நடந்தாலும் அவற்றை சாதுர்யமாக எதிர்கொண்டு இந்த ஆட்சி சிறப்பாக நடைபெறுகின்றது எனவும்,கோவை மாவட்டத்திற்கு தேவையான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை இந்த அரசு வழங்கி உள்ளதாகவும், குறிப்பாக அதிக நிதி ஒதுக்கப்பட்டு பள்ளிக் கல்வித்துறைக்கு பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றது எனவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
இதனைதொடந்து பேசிய பள்ளி கல்வ்த்துறை அமைச்சர் செங்கோட்டையன்,
பள்ளியின் நூற்றாண்டை முன்னிட்டு இந்த பள்ளிக்கு கலையரங்கம்,புதிய கட்டிடங்கள் கட்டப்படும் எனவும் தெரிவித்தார்.நீட் தேர்விற்காக 3000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும்,குறைந்தது 1500 மாணவர்கள் தமிழகத்தில் இருந்து மருத்துவகல்லூரிக்கு செல்வார்கள் எனவும் தெரிவித்தார்.
அனைத்து வகுப்புகளுக்கும் பாடதிட்டங்கள் படிப்படியாக மாற்றப்படும் என தெரிவித்த அவர், சிபிஎஸ்சி பாட திட்டத்திற்கு நிகரான பாடத்திட்டம் கொண்டுவரப்படும் எனவும் 2 ஆண்டு காலத்திற்குள் அனைத்து பாடதிட்டங்களும் மாற்றப்பட இருக்கின்றது எனவும்,படிப்படியாக மாணவர்ரகளுக்கு சீருடை மாற்றி அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும்,பாடத்திட்டங்கள் மாற்றி அமைத்த பின்னர்,அமெரிக்காவில் உள்ள பில்கேட்ஸ் நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை எப்படி நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,
தமிழகத்தில் 3108 மாணவர்கள் நீட் பயிற்சி பெறுகின்றனர் எனவும்,அவர்களுக்கு உண்டு உறைவிட வசதியுடன் சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகின்றது எனவும் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் நல்ல முறையில் தேர்ச்சி பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும்,8 ம் வகுப்பு பாடத்தட்டத்தில் பாலியல் வன்முறையை தடுக்கும் வழிமுறைகளில் பெண்களின் உடை குறித்து இருக்கும் கருத்துகள் வரும் காலங்களில் மாற்றப்படும் எனவும் தெரிவித்த அவர்,25 சதவீத இட ஒதுக்கீடு வழங்காத தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.2015 ஆம் ஆண்டில் இருந்து பள்ளிகள் மூடுவது குறித்த சுற்று அறிக்கை வெளியிடப்படுவதாகவும்,அவை அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தற்போது இந்த அறிக்கை பூதா கரமாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும்,10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்பு ஏற்படுத்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.