• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லப்படும் மின் கோபுரங்கள்

January 17, 2017 ஜாகர்

கொங்கு மண்டல விவசாய பகுதிகளில் மின்சாரம் கொண்டு செல்ல பதிக்கப்படும் மின் கோபுரங்களால் பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அதற்கு மாற்றாக, மின்சார விநியோகித்தை கேபிள் லைன் வழியாக எடுத்துச் செல்லலாம் என்றும் யோசனை கூறினர்.

தமிழகத்தில் கொங்கு மண்டலம் என அழைக்கப்படும் கோவை, கரூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நகர்ப்புறங்களில் விவசாயம் மறைந்து பல்வேறு தொழில்கள் பெருகி வருகின்றன. இருந்தாலும் கிராமப்புறங்களில் விவசாயம் பாதுகாக்கப்பட்டு பிரதான தொழிலாக உள்ளது. கம்பு, சோளம், கேழ்வரகு, கரும்பு, திராட்சை, தென்னை, காய்கறி வகைகள் ஆகியவை அதிக அளவில் விவசாயம் செய்யபடுகின்றன.

கொங்கு மண்டல விவசாயிகள் கடந்த 2 வருடங்களாகப் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். தண்ணீர்ப் பற்றாக்குறை, மின்சாரம்ப் பிரச்சினை, மத்திய அரசின் கெயில் நிறுவனம் விவசாய நிலம் வழியாக எரிவாயு கொண்டு செல்வதற்கான குழாய் பதித்தல், உரம், விதை ஆகியவற்றின் விலை உயர்வு, வேலைக்குப் போதிய ஆட்கள் கிடைப்பதில் சிரமம் போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

இது போன்ற பிரச்சினைகளை ஓரளவு சமாளித்து, இனி வரும் காலத்திலாவது நிம்மதியாக விவசாயம் செய்யலாம் என நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், விவசாய நிலங்கள் வழியாக மின் கோபுரம் கொண்டு செல்லும் திட்டம் கொங்கு மண்டல விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள புதிய பிரச்சினைகயாகிவிட்டது.

தமிழகத்தின் பல பகுதிகளில் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு அதனை வெளிமாநிலங்களுக்கு விற்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தின் மையப் பகுதியில் மிகப்பெரிய அளவில் 100 ஏக்கருக்கும் மேலான இடத்தில் மிகப்பெரிய அளவில் டவர்லைன் ஹவுஸ் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் தேனி மாவட்டம் தப்பகுண்டுலிருந்து பொள்ளாச்சி வட்டம் அணைக்கடவு வரை, அணைக்கடவிலிருந்து கோவையில் உள்ள ராசிபாளையம் வரை, கோவை அரசூரிலிருந்து ஈங்கூர் வரை என இந்த பகுதிகளுக்கெல்லாம் செல்லக்கூடிய மின்சாரம் திருப்பூர் மாவட்டம் இச்சிப்பட்டியில் அமைந்துள்ள பவர் ஹவுஸ் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இது குறித்து ராசிபாளையம் பகுதியில் விவசாயம் செய்து வரும் வேலுச்சாமி கூறுகையில், “இப்பகுதியில் பல வருடங்களாக விவசாயம் செய்து வருகிறேன். விவசாயம் செய்ய வங்கிகள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றிடம் இருந்து கடன்களை வாங்கித்தான் விவசாயம் செய்ய வேண்டிய நிலையுள்ளது. மழை பொய்த்து விடும் காரணங்களால் பயிர்கள் கருகி, நஷ்டம் ஏற்படுகிறது. இது போன்ற நஷ்டங்களை அடுத்த அறுவடையில் சரிக்கட்டி விடலாம். ஆனால், விவசாய நிலங்களில் குழாய் பதித்தல், மின் கோபுரங்கள் போன்றவை நிறுவப்படும்போது விவசாயிகள் நிலங்களை இழந்து தவிக்கிறோம். அதற்கான உரிய இழப்பீடும் தரப்படுவதில்லை. விவசாயிகளைப் பாதிக்காத வகையில் இது போன்ற திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்த வேண்டும்” என்றார்.
.
இந்த மின் திட்டத்தால் கொங்கு மண்டலத்தில் உள்ள விவசாயிகள் பெருமளவில் பாதிப்படைவதாகவும், எந்தவித முன்னறிவிப்போ விவசாயிகளின் அனுமதியோ இல்லாமல் மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் சில தனியார் நிறுவனங்களின் ஆட்கள் அத்துமீறி விவசாய நிலங்களில் “டவர்” அமைக்கும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இழப்பீடு வேண்டாம், விவசாயம் வேண்டும்:

இது குறித்து விவசாயி செந்தில்குமார் கூறுகையில், “ஒரு டவர் லைன் அமைப்பதால் எங்களின் விவசாய நிலம் சுமார் 3.5 ஏக்கர் பாதிக்கப்படுகிறது. அதற்கு அரசு இழப்பீடு வழங்க தயாராக இருந்தாலும் எங்களுக்கு அது வேண்டாம். விவசாயமே தேவை என போராடி வருகிறேன்“ என்றார்.

இது குறித்து மின்வாரியத் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “சில திட்டங்கள் விவசாய நிலங்கள் வழியாக தான் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அது தவிர்க்க முடியாதது. அதற்கு உரிய இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஆனாலும் வழங்கிவிடுவோம். விவசாயிகளுக்கும் இது போன்ற திட்டங்களால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படாது “ என்றார்.

நாளுக்கு நாள் விவசாயத்திற்கு அதிகரித்து வரும் ஆபத்துகளால் விவசாய நிலங்கள் குறைந்து அழிந்துவரும் சூழலில், இந்த மின்திட்டத்தால் தற்போது உள்ள விவசாய நிலங்களுக்கும் ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது.

“மின் தட்டுப்பாட்டைப் போக்கக் கூடிய அளவில் அமையக்கூடிய இந்த திட்டத்தை எதிர்ப்பதல்ல எங்கள் நோக்கம்” என்று கூறும் விவசாயிகள் அமெரிக்க ஐரோப்பியா நாடுகளிலும் நம் நாட்டிலேயே பெரிய நகரங்களான தில்லி, மும்பை சென்னை போன்ற பகுதிகளிலும் உள்ளது போல் கேபிள்லைன் மூலம் மின்சாரம் கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு செயல்படுத்தினால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை”
என்று வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க