August 16, 2018 தண்டோரா குழு
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக்குறைவால் தனது 93 வயதில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் 1999ல் அவர் பிரதமராக இருந்தபோது தமிழகத்தில் செய்த ஒரு செயலை தமிழக மக்கள் இன்றளவும் மறந்திருக்கமாட்டார்கள். சின்னப்பிள்ளை இவர் மதுரை மாவட்டம், அழகர் கோவில் சாலையில் உள்ள கள்ளந்திரி கிராமத்தில் பிறந்து, மதுரையிலிருந்து பன்னிரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பில்லுச்சேரி கிராமத்தில் வசித்து வருகிறார். கிராமப்புற மகளிரிடையே சிறுசேமிப்பு பழக்கம் ஏற்படுத்தி, களஞ்சியம் எனும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காட்டினார்.
அவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசின் ‘ஸ்திரீ சக்தி புரஸ்கார்’ விருதினை 1999ல், அப்போதைய பிரதமர் வாஜ்பாய் வழங்கினார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் வாஜ்பாய் அவரது கால்களை தொட்டு வழங்கினார். வாஜ்பாயின் இந்த செயல், தமிழக மக்களிடம் பாராட்டை பெற்றது. இந்நிலையில்,வாஜ்பாயின் மறைவை கேட்டு மதுரை சின்னபிள்ளை வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
என் சேவைக்கு அங்கீகாரம் அளித்து சக்தி புரஸ்கார் விருது வழங்கியவர் வாஜ்பாய். அப்போது அவர் திடீரென எனது காலில் விழுந்து விட்டார்.இதைப் பார்த்து நான் அதிர்ந்து விட்டேன். நாட்டுக்கே தலைவர் எனது காலில் விழுந்து விட்டாரே என்று அதிர்ச்சியாகிவிட்டது. அப்போது எனக்கு அருகில் இருந்த ஒருவர் தமிழில் என்னிடம், நீங்க செய்த செயலைப் பார்த்து வியந்து உங்களை கடவுளாக எண்ணி காலில் விழுந்தார் வாஜ்பாய். தப்பா நினைச்சுக்காதீங்க என்று கூறினார். அந்த மாதிரி ஒரு தங்க ராசா இன்று இறந்து விட்டது எனக்கு வருத்தமாக உள்ளது. எனது காலில் விழுந்து வாஜ்பாய் வணங்கியதை என்னால் மறக்க முடியாது என கூறியுள்ளார்.