May 22, 2018 தண்டோரா குழு
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தடையை மீறி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டகாரர்களுக்கும் போலீஸாருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 100வது நாளை எட்டியது.இதையடுத்து,ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டது.
இப்போராட்டத்துக்கு ஆதரவாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். அதைப்போல் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.
இதற்கிடையில்,தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் நேற்றிரவு முதல் நாளை காலை 8 மணிவரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில்,ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் இன்று 100வது நாள் பேரணியாக சென்றனர். அப்போது,மடத்தூர் என்ற இடத்தில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.ஆனால் தடையை மீறி போராட்டக்காரர்கள் முன்னேறியதால் இருதரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு வன்முறை ஏற்பட்டது.
அப்போது,போலீஸ் நடத்திய தடியடியில் பொதுமக்களில் ஒருவருக்கு மண்டை உடைந்தது. இதனால் காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போராட்டம் தீவிரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போலீசார் வாகனங்கள் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர்.இதனால் போலீசார் ஓட்டம் பிடித்தனர்.
இந்நிலையில், தற்போது போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.