October 16, 2018 தண்டோரா குழு
தமிழகம் முழுவதும் கேன் வாட்டர் உற்பத்தி இன்று மாலை முதல் குடிநீர் கேன் உற்பத்தி நிறுத்தப்படும் என குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சட்டவிரோத நிலத்தடி நீர் உறிஞ்சுதலை தடை செய்தும், வர்த்தக பயன்படுத்துதலுக்காக நிலத்தடி நீர் உறிஞ்சுதலை முறைப்படுத்த வேண்டும் என்றும் சென்னை
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வேண்டும், கனிம வள பிரிவிலிருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதனால், மூன்று மாவட்டங்களிலும் 4 ஆயிரத்து 500 தனியார் தண்ணீர் லாரிகள் இயங்கவில்லை.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் கேன் வாட்டர் உற்பத்தி இன்று மாலை முதல் குடிநீர் கேன் உற்பத்தி நிறுத்தப்படும் என குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. குடிநீர் தேவைக்காக நிலத்தடி நீரை எடுக்க அனுமதிக்க கோரி முதற்கட்டமாக 3 மாவட்டங்களில் உள்ள 450 நிறுவனங்களில் 300 நிறுவனங்களை மூட உள்ளதாக கேன் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வணிக வளாகங்கள், தனியார் தங்கும் விடுதிகள், உணவகங்கள், கட்டுமானப் பணிகள் போன்றவற்றுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது