October 16, 2018 தண்டோரா குழு
ஜல்லிக்கட்டு பாணியில் சபரிமலைக்காக அவசர சட்டம்கொண்டு வரவேண்டும் என்று பத்தினம்திட்டா லோக்சபா தொகுதி எம்.பி அன்டோ அந்தோணி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளும் 50 வயதைத் தாண்டிய பெண்களும் மட்டும் நுழைய அனுமதி இருந்தது. இந்த நடைமுறையினை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்டோர் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தீபக் மிஸ்ரா, ஆர்.எப் நாரிமன், ஏஎம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் கொண்ட அமர்வு சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற வரலாற்று தீரப்பினை வழங்கியது. உச்சநீமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், வரவேற்றும் கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதற்கிடையில், தீர்ப்பைத் தொடர்ந்து அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி முதல் பெண்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.அதைபோல் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாநில அரசு சிறப்பாக மேற்கொள்ளும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவசரச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இந்நிலையில், ஐயப்ப பக்தர்களின் முக்கிய பகுதியான எரிமேலியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கேரளா காங்கிரஸ் (எம்) இணைந்து இன்று நடத்திய உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான, ஆர்ப்பாட்டத்தில், அன்டோ அந்தோணி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில்,
“நூற்றாண்டுகளாக இருக்கும் அய்யப்பன் கோயிலின் பாரம்பரியம் காப்பாற்றப்பட வேண்டும். “நாளை சபரிமலை ஐயப்பன் கோயிலில், மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்பட உள்ளது. இம்முறை சரண கோஷத்திற்கு பதில் இங்கு மோதல்கள் நடப்பது எங்களுக்கு கவலை தருகிறது. சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்குமாறு, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மத வேறுபாடுகள் இன்றி அனைத்து தரப்பினருமே எதிர்க்கிறார்கள்.கேரளா வரும் பக்தர்களுக்கு உரிய சேவைகளை செய்ய வேண்டிய காலகட்டம் இது.
ஆனால், இங்கு ஒவ்வொரு தெருக்களிலும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், சபரிமலை பாரம்பரியத்தை காக்க வீதிக்கு இறங்கி போராடிக்கொண்டுள்ளார்கள்.தீர்ப்புக்கு பின் போராட்டங்களை பார்க்கும் பிரதமர் மோடி எந்தவிதமான கருத்தும் கூறவில்லை. அவசரச்சட்டத்தின் மூலம் உச்சநீதிமன்ற தீர்ப்பை சட்டரீதியாக தடுக்க முடியும். உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தபோதிலும், சட்டரீதியான நடவடிக்கையின் மூலம் நடத்தப்பட்டது. அதுபோன்று இங்கும் அவசரச்சட்டம் பிறப்பிக்க வேண்டும். பின்னர் நாடாளுமன்றத்தில் அதை சட்டமாக நிறைவேற்றலாம் என்று கூறியுள்ளார்.
.