February 16, 2018 தண்டோரா குழு
கோவையில் காவிரி நதிநீர் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து, கர்நாடகா ஆசோசியேஷன் கட்டிடத்தை முற்றுகையிட முயன்ற தபெதிக அமைப்பினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
காவிரி நதிநீர் தொடர்பான உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து, கோவை டாடாபாத் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம்,விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து ஊர்வலமாக வந்து அப்பகுதியில் உள்ள கர்நாடகா ஆசோசியேஷன் கட்டிடத்தை முற்றுகையிட முயன்றனர்.காவல் துறையினரின் தடுப்புகளை மீறி செல்ல முயன்றதால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழகத்திற்கு அநீதி இழைக்கும் வகையில் உள்ளதாகவும்,கர்நாடகாவிற்கு சாதகமாக அமைந்துள்ளது எனவும், இத்தீர்ப்பை எதிர்த்து தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவ்வமைப்பினர் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டம் நடத்திய 20 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.