June 19, 2018 தண்டோரா குழு
காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை மெஹபூபா முப்தி ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.இதில்,மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெஹபூபா முஃப்தி முதல்வராக ஆட்சி செய்து வருகிறார்.
இந்நிலையில்,அண்மைக்காலமாக காஷ்மீரில் நிலவும் சூழல் காரணமாக இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.மேலும்,பயங்கரவாதம்,வன்முறை,பத்திரிகையாளர் சுடப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகள் கூட்டணியை பாதித்தன.
இதற்கிடையில்,ஜம்மு – காஷ்மீர் அரசுக்கு பா.ஜ.க அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றது. இதனால்,அம்மாநிலத்தில் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது.இதனையடுத்து மெகபூபா முஃப்தி பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து,தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்.
காஷ்மீரில் 89 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் மெஹபூபா கட்சிக்கு 28 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.25 எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. கொண்டுள்ளது.உமர்அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சிக்கு 15 எம்.எல்.ஏ.க்களும்,காங்கிரஸ் கட்சிக்கு 12 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
இந்நிலையில்,முதல்வர் பதவியை மெஹபூபா ராஜினாமா செய்துள்ளதால் 28 எம்.எல்.ஏ.க்கள் உள்ள மெஹபூபா கட்சிக்கு காங்கிரஸ் மற்றும் உமல் அப்துல்லா கட்சி ஆதரவு தருமா? புதிய அணி உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.