June 19, 2018 தண்டோரா குழு
காஷ்மீரில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பலம் இல்லாததால் ஆளுநர் ஆட்சிதான் ஒரே தீர்வு என தேசிய மாநாடு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.இதில்,மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெஹபூபா முஃப்தி முதல்வராக ஆட்சி செய்து வருகிறார்.
இந்நிலையில்,அண்மைக்காலமாக காஷ்மீரில் நிலவும் சூழல் காரணமாக இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.மேலும்,பயங்கரவாதம்,வன்முறை,பத்திரிகையாளர் சுடப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகள் கூட்டணியை பாதித்தன.இதற்கிடையில், ஜம்மு – காஷ்மீர் அரசுக்கு பா.ஜ.க அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றது.இதனால்,அம்மாநிலத்தில் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது.
இதனால், மெகபூபா முஃப்தி பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து, தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்.இந்நிலையில், காஷ்மீரில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தமது கட்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் இல்லை.ஆட்சி அமைக்க ஆதரவு கோரி வேறு கட்சிகள் தம்மை தொடர்பு கொள்ளவில்லை.காஷ்மீரில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பலம் இல்லாததால் ஆளுநர் ஆட்சிதான் ஒரே தீர்வு.
ஆளுநர் என்.என்.வோராவைச் சந்தித்த போதே தமது நிலையை கூறிவிட்டதாக தேசிய மாநாடு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா பேட்டியளித்துள்ளார்.ஆனால் நீண்ட நாட்களுக்கு ஆளுநர் ஆட்சி தொடரக் கூடாது என்பதையும் தெரிவித்துள்ளோம் என உமர் அப்துல்லா கூறியுள்ளார்.