July 23, 2018 தண்டோரா குழு
திருநெல்வேலியில் உள்ள ராம் முத்துராம் திரையரங்கில் முதன்முறையாக இளநீர் விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
பாண்டிராஜ் இயக்கத்தில்,கார்த்தி நடிப்பில் கடந்த 13ம் தேதி கடைக்குட்டி சிங்கம் படம் வெளியானது.விவசாயத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த படம்,மக்களிடம் விவசாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.இதன் எதிரொலியாக,நெல்லையில் உள்ள ராம் திரையரங்கில் தமிழகத்தில் முதன் முறையாக இளநீர் விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அத்திரையங்கில் கடைக்குட்டி சிங்கம் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.ராம் சினிமாஸ் நிர்வாகம் தங்கள் திரையரங்கம் சம்மந்தப்பட்ட விஷயங்களை அவ்வபோது டுவிட்டரில் தெரிவித்து வருகிறது.அந்த வகையில் ரசிகர் ஒரு ராம் முத்துராம் சினிமாஸ் டிவிட்டர் கணக்கை குறிப்பிட்டு “இளநீர் பானம் விற்க முயற்சி பண்ணுங்க விவசாயிக்காக” எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு அந்நிர்வாகம் கண்டிப்பாக முயற்சி செய்கிறோம் என்று பதிலளித்தது.இதையடுத்து ராம் முத்துராம் திரையரங்கில் தமிழகத்தில் முதன்முறையாக இளநீர் விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.இதனை அத்திரையரங்கின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதில்,”ரசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க மற்றும் தற்போதுள்ள விவசாய நலனை கருதி நம் திரையரங்கில் இளநீர் இனி விற்கப்படும் !! விவசாயம் பற்றி பேசும் ‘கடைக்குட்டி சிங்கம் ‘ திரையிடும் சமயத்தில் இந்நிகழ்வை நடத்தியதில் மகிழ்ச்சி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக நுங்கு உள்ளிட்டவைகளை விற்பனை செய்யவும் திரையரங்கு நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.