October 17, 2018 தண்டோரா குழு
இந்தியாவில் #Metooஎன்னும் ஹாஸ்டேக் மூலம் பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை தைரியமாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். திரையுல பிரபலங்கள் தொடங்கி,பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது மீ டூ மூலம் பல பெண்கள் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். இதனால் அவர் இணையமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
தமிழகத்தில் மீடு ஹாஸ்டேக் மூலம் பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது தொடர்ந்து பாலியல் புகார் தெரிவித்து வருகிறார். அவரை பலரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி, கடம் உமாசங்கர் மீது #MeToo பாலியல் புகர் செய்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
கடந்த 2010ம் ஆண்டு தான் நான் முதல் முறையாக கடம் உமாசங்கரை சந்தித்தேன். அப்போது நான் ஒரு ரேடியோவில் ஆர்.ஜே.வாக பணியாற்றி வந்தேன். ஒரு நிகழ்ச்சிக்காக அவர் எங்கள் ரேடியோ ஸ்டேஷனுக்கு விருந்தினராக வந்தார். நிகழ்ச்சி முடித்ததும் என் செல்போன் எண்ணை வாங்கி எனக்கு ஸ்வீட்டி என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி மெசேஜ் அனுப்பினார். நான் அதை பொருட்படுத்தவில்லை. அதன் பின் ஏழு வருடங்களுக்கு பிறகு நான் டிஜிட்டல் மீடியா நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது யூடியூப் சார்ந்த ப்ராஜெக்ட் தொடர்பாக அவர் அங்கு வந்தார். என்னை கடந்து சென்றபோது என் இடுப்பில் கிள்ளினார். என் அலுவலகத்தில் சக ஊழியர்கள் கண் முன்பு பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்தபோது அங்கிருந்த ஆண்களும் என்னை போன்றே அதிர்ச்சி அடைந்தார்கள். அதில் இருந்து அவர் தொடர்பான ப்ராஜெக்டுகளில் நான் வேலை செய்வதை தவிர்த்தேன். அதற்கு என் நிறுவனமும் சம்மதித்தது. இப்படிபட்ட அவர் கடவுள் பற்றியும், தான் ஒரு பக்திமான் என்றும் பேசுவது என்னை எரிச்சல் அடைய வைக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
அதைபோல், ஸ்ரீரஞ்சனி மற்றொரு டுவிட்டில் நடிகர் ஜான் விஜய் எனக்கு போன் செய்து செல்போன் மூலம் செக்ஸ் வைத்துக் கொள்வது குறித்து பேசியதாக தெரிவித்துள்ளார்.