October 22, 2016 தண்டோரா குழு
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் தேர்தலை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்கிறது என்று கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் ம.தி.மு.க. பொதுச் செயலாளருமான வைகோ சனிக்கிழமை அறிவித்தார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டப் பேரவைத் தேர்தலின்போது, வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்ததாக வந்த புகாரை அடைத்து, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதி களுக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. அதையடுத்து நடந்த தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சீனிவேல் உடல் நலக் குறைவு காரணமாக இறந்துவிட்டார். இதையடுத்து, காலியான அந்தத் தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தற்போது மூன்று தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் 19 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இதில் போட்டியிடுவதற்காக பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டன.
“இந்தத் தொகுதிகளில் தேர்தல் நேர்மையாக நடைபெறாது. எனவே, மக்கள் நலக் கூட்டணி இத்தேர்தலைப் புறக்கணிக்கிறது” என்று அதன் ஒருங்கிணைப்பாளரான வைகோ அறிவித்துள்ளார்.