March 29, 2017 தண்டோரா குழு
தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளிடம் விவசாயிகள் வாங்கிய கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,தமிழக அரசு கோரிய வறட்சி நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்,காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், தென்னக நதிகள் இணைப்புக்கு உடனே நடவடிக்கை வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள், 16-வது நாளாக இன்றும்(மார்ச் 29) அரைநிர்வாண போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுநாள் வரை மண்டை ஓட்டைகழுத்தில் கயிறு கட்டி தொங்கவிடப்பட்ட போராட்டம், எலிக்கறி திண்ணும் போராட்டம், அரைநிர்வாண போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் தமிழக விவசாயிகள் ஈடுபட்டனர். இன்று(மார்ச் 29) பாம்புக்கறி திண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும்,தமிழ் அமைப்பினரும் தில்லி ஜந்தர்மந்தரில் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சி,தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக மக்கள்,மாணவர்கள் என பல தரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.
பிரதமர் மோடியிடம் இருந்து அறிவிப்பு வெளியாகும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.