January 18, 2017 தண்டோரா குழு
ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதி கோரி மதுரை அலங்காநல்லூரில் 3-வது நாளாகவும், சென்னை, நெல்லை, கோவை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளில் 2-வது நாளாகவும் மாணவர்களுடன் இணைந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உலகப்புகழ் பெற்றது மதுரை மாவட்டம் அலங்காநல்லூர். உச்ச நீதிமன்றத் தடையால் மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை. இதனைக் கண்டித்து அலங்காநல்லூரில் திங்கட்கிழமை முதல் மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு அமைப்பினர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
“ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்பை இந்தியாவில் தடைசெய்ய வேண்டும்“ என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் அலங்காநல்லூரில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தற்போது தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தின் தலைநகரான சென்னை மெரீனா கடற்கரையில் மாணவர்கள், அவர்களுக்கு ஆதரவாக நடிகர்கள், பொதுமக்கள் என விடிய விடிய கொட்டும் பனியிலும் 2 வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. “தமிழக முதலமைச்சர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்“ என்கிற கோரிக்கையை முன் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், விவசாயிகள் , பொதுமக்கள் கலந்துகொண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். “ஜல்லிக்கட்டு நடைபெற அனுமதிக்கவில்லை என்றால் ஆதார் அடையாள அட்டைகளை எரித்துப் போராட்டம் நடத்துவோம்“ என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதே போல் கரூர் சுங்கச்சாவடி பகுதியில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது.ஈரோடு கோபி செட்டிபாளையத்தில் மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தஞ்சாவூரில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.